புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இருந்தபோது, அவரது அலுவலகத்தில் பணியாற்றிய 35 வயதுள்ள பெண் ஊழியர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார். இதனால், இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் வழக்கு பதிவு செய்து விசாரித்தது. 3 நீதிபதிகள் அடங்கிய குழு, ‘குற்றச்சாட்டில் அடிப்படை ஆதாரமோ, முகாந்திரமோ இல்லை,’ என கூறி அறிக்கை அளித்தது. இந்நிலையில், நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், ‘‘இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரித்த சிறப்பு விசாரணை குழு, குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என தெளிவாக கூறியுள்ளது. மேலும், புகார் கூறிய பெண், சரியான ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை. அதனால். இந்த பாலியல் குற்றச்சாட்டில் எந்தவித அடிப்படை முகாந்திரமும் கிடையாது எனக் கூறி, நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைக்கிறது,’ என நீதிபதிகள் கூறியுள்ளனர். கோகாய் தற்போது, பாஜ.வின் சார்பில் மாநிலங்களவை எம்பி.யாக உள்ளார்.